செய்திக்கு அரசியல் உண்டு, அழகியல் உண்டா? ஆம் உண்டு.
செய்தி ஆக்கத்தைக் “கதை செய்தல்” என்றே ஊடகவியலில் குறிப்பிடுகிறோம். கதை என்றால் அது படிக்கவோ பார்க்கவோ கேட்கவோ சுவையாக இருக்க வேண்டும்.
செய்தி சுவையாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சோகமான செய்தியில் சுவையை எதிர்பார்க்கலாமா? ஒரு புரட்சிகரமான போராட்டச் செய்தி சுவையாக இருக்குமா?
சுவை என்றால் இங்கே அந்த உணர்வு ஏற்படுத்தப்படுவது என்றே பொருள். சோகமான நிகழ்வு பற்றிய செய்தியைப் படிக்கிறவர்களுக்கு அந்தத் துயர உணர்வு தொற்றிக்கொள்ள வேண்டும். போராட்டச் செய்தியைப் படிக்கிறவர்களுக்கு அந்தப் புரட்சிகர உணர்வு தூண்டப்பட வேண்டும்.
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், வாழ்க்கையின் அவலத்தைச் சொல்கிற ஒரு கவிதை அந்த அவலம் பற்றிய சிந்தனையோடு, கவிதையை வாசிக்கிற கவித்துவமான பரவச உணர்வைத் தர வேண்டுமல்லவா? எழுச்சிகரமான ஒரு கதையைச் சித்தரிக்கிற சினிமா அறுவையாக இருந்தால் ரசிப்போமா? அதுபோலத்தான் செய்தியாக்கமும்.
சமுதாயத்தின் பிற்போக்குத் தனத்தை அப்படியே தக்க வைக்க வேண்டும் என எழுதுகிறவர்கள் சுவைபட எழுதுகிற கலையைக் கற்றிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களது எழுத்தை ஏராளமானோர் விரும்பிப் படிக்கிறார்கள் – யாரைத் தாக்குகிறார்களோ அவர்கள் உட்பட! அப்படியானால், சமுதாயத்தின் முற்போக்கான மாற்றங்களுக்காக எழுதப் புறப்பட்டவர்கள் அந்தக் கலையைக் கற்க வேண்டாமா? இயக்கம் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு அது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை மட்டும் அல்ல, நிறைவேற்ற வேண்டிய கடமையும் கூட.
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்




You must be logged in to post a comment.