திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநகர் முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டது.குறிப்பாக அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு சாலையின் நடுவிலும் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் ஓரத்திலும் புதைவட மின்கம்பி மற்றும் மின்விளக்கு திட்டத்திற்காக சாலையின் மறு புறத்திலும் தோண்டப்பட்ட பள்ளங்களை அந்த பணிகள் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடாத காரணத்தினால் மாநகர் முழுவதும் உள்ள பல சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன.குறிப்பாக நெல்லை பேட்டை பகுதி, பழையபேட்டை , காந்திநகர் ,தச்சநல்லூர், நயினார்குளம் சாலை, சமாதானபுரம், நெல்லை சந்திப்பு பகுதி, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பகுதி சர்வீஸ் சாலைகள் , நெல்லை டவுண் பகுதி பிரதான சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகள் கடுமையாக பாதிப்படைந்து போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலையில் உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் இந்த சாலையின் பள்ளங்கள் வெளியே தெரியாத காரணத்தினால் இதன் மீது செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.மேலும் கனரக வாகனங்களும் இந்த பள்ளத்தில் சிக்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர் முழுவதும் நிலவும் இந்த அவலத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைத்து பொதுமக்களை விபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.