திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி, கோயில்மேடு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய இந்த கந்தசஷ்டி திருவிழா, இந்த மாதம் நவம்பர் ஆறாம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், பானுகோபன், சூரபத்மன் ஆகியோரை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏழாம் நாளான இன்று பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவேந்திரனின் மகளான தேவசேனாவுடன் திருமணம் நடைபெறும் சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்து முருகனின் அருள் பெற்றனர். வந்திருந்த சுமங்கலிப் பெண்கள் அனைவருக்கும் திருமாங்கல்யம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹார வைபவத்தின்போதும் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து முருகன் அருள் பெற்றனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பாலாஜி குருக்கள், சசி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.