மாலத்தீவுக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற தூத்துக்குடி தோணி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தோணி என அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி தூத்துக்குடியில் இருந்து ‘ஆர்க் ஆஃப் காட்’ என்ற தோணி 150 டன் வெங்காயம் மற்றும் சிமெண்ட் உட்பட கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது.இதில், மாலுமி ஜெயசந்திரன் தலைமையில் ஜோசப், சுரேஷ், டேவிட் ராஜா, உல்ஸ்டன், ராஜேஷ் சேவியா், செல்வம், விஜில்ஸ், மைக்கேல் ஆகிய ஒன்பது பேர் பயணம் செய்தனர். பயணத்திட்டப்படி, இந்தத் தோணி 22ம் தேதி மாலத்தீவு சேரவேண்டும்.
ஆனால், 21ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மாலத்தீவில் இருந்து வடக்கே 116 கடல் மைல் தொலைவில் சென்றபோது நடுக்கடலில் கனமழை மற்றும் காற்றின் வேகத்தால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தோணி கடலில் மூழ்கியது. தோணியில் இருந்த 9 பேரும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி நோக்கிச் சென்ற ‘வி.பி.பிராக்கா்ஸ்’ என்ற கப்பலில் இருந்தவா்கள் கடலில் தத்தளித்தவா்களை மீட்டனா். மீட்கப்பட்ட 9 பேரும் அந்த கப்பல் மூலம் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வந்தனா்.
அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கடலோர காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் காவல் துறையினா், வெளியுறவுத் துறையினா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, 9 பேரும் அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். –
சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து




You must be logged in to post a comment.