18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » “இலங்கை – இந்திய உறவு வானத்தை தொட்டு விட்டது..!” – இந்திய தூதர்

“இலங்கை – இந்திய உறவு வானத்தை தொட்டு விட்டது..!” – இந்திய தூதர்

எழுதியவர்: mohan October 18, 2019, 7:45 pm

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தற்போது வானத்தை தொட்டிருக்கிறது” என்று, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்த் தெரிவித்தார்.இலங்கையின் பலாலி விமான நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா நேற்று (17ம் தேதி) திறந்து வைத்தார். இதில், பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்த் பேசுகையில், “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவானது தற்போது வானத்தை தொட்டிருப்பதாக நினைக்கிறேன்.

அத்துடன் இந்த முதலாவது விமான சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் – உறவுக்கான அர்ப்பணிப்பு தொடரும் என்பதற்கான மற்றொரு உதாரணமாகும். இருநாட்டு நட்புறவு, அபிவிருத்தி, கூட்டுறவு என்ற விஷயங்களும் வெளிப்பட்டுள்ளன.அத்துடன் மக்கள் தொடர்பின் ஆழத்தை மேலும் வலுவாக்க வேண்டியதிலுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிப்பதாக அமைகின்றது. இதில் வடக்கு மக்களின் கல்வி, சுகாதாரம், வீட்டுத்திட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார மத்திய நிலையம் என்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் வேலைகள் முடிந்தவுடன் நிரந்தர வர்த்தக துறைமுகமாக இவை இயங்கும். அதேபோல் இப்போது விமானநிலையம் உருவாக்கப்பட்டதன் மூலமாக தென்னிந்திய – யாழ்ப்பாணம் சேவை மேலும் பலமடைந்துள்ளது.சென்னை – யாழ்ப்பாணம்  விமானசேவை உருவாக்கப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியிலும் சுற்றுலா ரீதியிலும் பெரிய பலமாக அமையும். இந்திய சுற்றுலா பயணிகளை இங்கு வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

எமது மனங்களில் இலங்கைக்கு எப்போதும் சிறப்பிடம் உள்ளது. 2015ல் இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி வருகை தந்தபோது இந்தியாவுக்கான எதிர்காலம் குறித்த எனது கனவு எமது அயலவர்களுக்குமானது” என்று கூறினார். அதுபோல், இந்திய உயர் துறையில் சிலரது முழுமையான ஒத்துழைப்பும் இருந்தது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘முயற்சி திருவினையாக்கும்’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். அந்த வாக்குக்கு அமைய நாம் முன்னெடுத்த முயற்சி இன்று எமக்கு கைகொடுத்துள்ளது. அந்த கடுமையான முயற்சியின் பயனாக இன்று வானுயர்ந்த உறவு பலமடைந்துள்ளது” என்றார்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!