18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களா? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களா? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

எழுதியவர்: mohan October 14, 2019, 7:21 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சுற்றுப்புற பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளில் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பால்சிகிச்சைக்கு வருவோர் விபரங்களை தலைமையிடத்திற்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கிராமப் பகுதிகளிலிருந்து அதிகமானோர் சிகிச்சைக்காக வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் சுற்றுப்புற தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.பொதுமக்களுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மருத்துவர் தகுதிச் சான்று இல்லாமல் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் போலி மருத்துவர்களை கண்டறிந்து தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்புக்குழு அமைத்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், பதற்றமடையாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை உடனடியாக அணுகி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து பரிந்துரை சீட்டு இன்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ளுதல் தவறான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உள்பட அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!