தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்குள் செல்லும் தனியார் பேருந்துகளின் அதிவேகத்தால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாள்தோறும் சென்று வருகின்றது. தர்மபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக ஓசூர் செல்லும் தனியார் பேருந்துகள் புறவழிசாலை பிரிவு சாலையில் இருந்து பேருந்து நிலையம் அடையும்வரை அதிவேகமாக செல்வதுடன் ஏர் ஹாரன்களும் ஒலித்தபடியே இயக்கப்படுகிறது. இவ்வழியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், கலைக்கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், , காவல் நிலையம் முதலிய அரசு அலுவலகங்கள் உள்ளன.
தர்மபுரியில் இருந்து வரும் அனைத்து தனியார் பேருந்துகளும் பாலக்கோடு நகருக்குள் வரும் போது தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்களை) ஒலித்து வருவதுடன், பேருந்துக்குள் சினிமா பாடல்களை மிகவும் சத்தமாக வைத்து வருகின்றனர். பேருந்துகளின் அதிவேகம் மற்றும் ஏர் ஹாரன் சப்தத்தால் இச்சாலையில் நடந்து செல்லும் மற்றும் டூ வீலர்களில் செல்பவர்களுக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் தனியார் பேருந்துகளின் அசுர வேகத்தை கண்டு சாலையில் செல்லும் மாணவ மாணவிகள், முதியவர்கள், மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ரோட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலை நடந்து வருகிறது.
தனியார் பேருந்துகளின் அதிவேகம் மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை ஒலிப்பது குறித்து பொதுமக்கள் பலமுறை போக்குவரத்துத் துறை நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடமும் புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பேருந்தில் உள்ள தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.