உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊரணியை தூர்வாரும்போது பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு. பொதுமக்கள் சிலையை மீட்டு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் பல வருடங்களாக தூர்வாரப்படாத ஊரணியை தற்போது தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரிக்கொண்டிருக்கும் போது 100 வருடங்கள் பழைமையான இரண்டு சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சிலைகளில் ஒன்று விஷ்னுவும், மற்றொன்று நாகர் சிலையும் என உறுதிசெய்யப்பட்டது. இந்த சிலைகளை மீட்டெடுத்த கிராம மக்கள் ஊரணி கரையிலேயே சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் 100 வருடங்களுக்கு முன்பு இருந்த முன்னோர்கள்; ஊரணி கரையில் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்ததாகவும், அதற்கு பின் பாராமரிப்பு இல்லாமல் ஊரணியில் மூழ்கி இருக்கலாம். தற்போது ஊரணி தூர்வாரப்படும் போது இந்த சிலைகள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கிடைத்தது கிராமமக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாகவும், இனி வரும் காலங்களில் ஊரணி கரையிலுள்ள பெத்தனசாமி கோவிலில் இரண்டு சிலைகளையும் வைத்து வழிபாடு நடத்தப்போவதாக கூறினர்.100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான சிலை கிடைத்து என உசிலம்பட்டிப் பகுதி முழுவதும் தகவல் பரவினாலும் அரசுத் தரப்பிலோ தொல்லியியல் துறையினரோ இதுவரை இச்சிலைகளை பார்வையிட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டி அருகே 100 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டுபிடிப்பு
எழுதியவர்: mohan September 20, 2019, 12:51 pm




You must be logged in to post a comment.