17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது சிறுமி கடிதம்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது சிறுமி கடிதம்

எழுதியவர்: mohan September 12, 2019, 12:33 pm

தேவகோட்டை – சந்திரயான் – 2 திட்டமிட்டபடி, நிலவில் தரை இறங்க முடியாமல் போனதால், கடின உழைப்பு,தன்னம்பிக்கை இரண்டும் இருப்பதனால் வெற்றி நிச்சயம் என, 11 வயது சிறுமி , இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, கைப்பட உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதி உள்ளது, சமூக வலைதளங்களில், பாராட்டுகளை பெற்று வருகிறது.சந்திரயான் – 2ல் இருந்து பிரிந்து சென்ற, “லேண்டர்’ எனப்படும் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பூமியுடனான தகவல் தொடர்பை இழந்தது.இந்நிலையில், லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி இருக்கும் புகைப்படத்தை, ‘ஆர்பிட்டர்’ எனப்படும் நிலவை சுற்றி வரும் சாதனம், நேற்று முன் தினம் வெளியிட்டது.

லேண்டரின் நிலை குறித்தும், தகவல் தொடர்பை மீண்டும் செயல்படுத்தவும், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் நதியா என்ற, 11 வயது சிறுமி , இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி உள்ளாள் .’தன்னம்பிக்கையே வெற்றி தரும், உங்கள் நம்பிக்கையை கை விடாதீர்கள், ‘ என, தலைப்பிடப்பட்டுள்ள இந்த கடிதத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் , ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சந்திரியான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான்.சந்திரியான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என்றும்,பின்பு விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன்.ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரியான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள்.இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும்,கடின உழைப்பும்,எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.விக்ரம் லேண்டருக்கு எந்த விதம் சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான்.முயற்சி திருவினையாக்கும்.கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில், பகிரப்பட்ட இந்த கடிதம், பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்களை குவித்து வருகிறது.கடந்த ஜூலை 9ம் தேதி (09/07/2019) இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அய்யப்பன் சந்தரியான் -2 வெற்றி பெற வாழ்த்தி இன்லேண்ட் கடிதத்தில் எழுதி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

.செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!