திருநெல்வேலியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கனி சந்தை வியாபாரிகள் திங்கள் கிழமை அன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கனி சந்தையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் ஸ்மார்ட்சிட்டி நகரமைப்பு திட்டத்தின் கீழ் இந்தச் சந்தையில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் கடைகளை காலி செய்யக் கோரி மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கால அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளை வியாபாரிகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் 2-ஆவதாகவும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியை கண்டித்து திங்கள்கிழமை அன்று காலையில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை தொடர்ந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சத்தியநாராயணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. என்.மாலைராஜா ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வியாபாரிகளின் பிரதிரிதிகள் தெரிவித்ததாவது:திருநெல்வேலி நகரம் தினசரி காய்கனி சந்தையை நம்பி 700 குடும்பங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த வாழ்வாதாரத்தை நம்பி வங்கிகளிலும், வெளியிலும் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தி வருகிறோம். இப்போது திடீரென மாநகராட்சி மூலம் 15 நாட்களுக்குள் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டடம் கட்ட இருப்பதால் அவகாசமும் கிடையாது. பின்பு அமைகின்ற கட்டடத்தில் முன்னுரிமையும் கிடையாது என சொல்கிறார்கள். இது குறித்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். கால அவகாசம் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.