இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயனங்கள் ஆராய்ச்சி கூடம் (CSMCRI) சார்பில் கடற்பாசி விதை உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது.விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் ( DG) ஷேகர் சி.மாண்டே திறந்து வைத்தார்.

இயக்குநர் அமித் தவ தாஸ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தனது உரையில், பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தும் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரதீப் கே.சிங், சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி, முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.கடற்பாசி வளர்ப்பில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடிபசுபதி முருகையா, ராமநாதபுரம் ஜெயலட்சுமி, விஜய முத்துராமன், அமுதா, புதுக்கோட்டை காளியம்மாள் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.விஞ்ஞானி சுப்ரமணியன், அக்வா அக்ரி தலைமை செயல் அதிகாரி தன்மாய் ஷேத், கடற்பாசி வளர்ப்பு கள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முனைவர் சண்முகம், பகுதி மேலாளர் செந்தில் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதன்மை விஞ்ஞானி கணேசன் கூறுகையில், தமிழகத்தில் புதுக்கோட்டை , ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக கடற்பாசி வளர்க்கப்படுகிறது. இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ பெண்களுக்கு மாதம் ரூ 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் கடற்பாசி வளர்ப்பு பாதித்தது. இத்தகைய இக்கட்டான நிலையில், கடற்பாசி வளர்ப்போருக்கு விதை வழங்குவதற்கு, ரூ.2.5 கோடி மதிப்பில் கடற்பாசி விதை உற்பத்தி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து விதை வழங்கப்படுவதால், கடற்பாசி வளர்ப்பை மீனவ பெண்கள் எவ்வித சிரமம் இன்று ஆண்டு முழுவதும் தொடரலாம்.இந்தியா முழுவதும் கடற்பாசி வளர்ப்பை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.




You must be logged in to post a comment.