18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கண் துடைப்பிற்காக நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்..TARATDAC கடும் கண்டனம்..

கண் துடைப்பிற்காக நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்..TARATDAC கடும் கண்டனம்..

எழுதியவர்: mohan July 13, 2019, 11:04 am

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் பலனாக தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும், சார் ஆட்சியர் தலைமையில் மாதம் ஒருமுறையும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கூட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என பல வழிகாட்டும் நெறிமுறைகளை விதித்துள்ளது.

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள எந்த வழிகாட்டும் நெறிமுறைகளையும் பின்பற்றாமல் வெறுமனே கண்துடைப்பிற்காக மட்டுமே இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கின்ற கூட்டங்களாக இருக்க வேண்டுமே ஒழிய மனுக்களை மட்டும் பெறுகின்ற கூட்டங்களாக இருக்க கூடாது என தெளிவாக வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில் நேற்று (11.07.19) திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மிகவும் தாமதமாக வந்தது, அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்கிற நிலையில் வெறும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மற்றும் வெகு சில துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுத்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி இல்லாதது, வீல்சேர் உள்ளிட்ட வசதிகளை செய்து தராதது என தமிழக அரசு பிறப்பித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டம் நடத்தியதை TARATDAC சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் முறையாக நடத்த வலியுறுத்தி கடந்த 24.06.19 அன்று பழனி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஐநூற்றும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலை முதல் மாலை வரை போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தை நடத்திய சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் முறையாக கூட்டம் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டம் நடத்தியது என்பது மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் செயலாகும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்கள் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!