திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில், ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் நடந்து சென்ற அசோக்கின் தாய் மீது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் பைக்கில் வந்து மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தட்டிக்கேட்கப் போய் அசோக்குக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு, காவல்நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இருவரையும் சமாதான பேச்சுவார்த்தைக்காக போலீசார்
அழைத்திருந்த நிலையில், புதன்கிழமை (12/06/219) 10.30 மணி அளவில் இரவு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அசோக்குமாரை அங்கு வந்த கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளது.
தகவலறிந்து போலீசார் வருவதற்குள் அங்கு ஒன்றுகூடிய அசோக்கின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், அசோக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.