தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருளர், காடர், குறும்பர், தோடர் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் உள்ளனர். இவர்கள், வனம், வனம் சார்ந்த இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். இவர்களுக்கென தனி மொழி, குடும்ப, சமூக பழக்க வழக்கம் உள்ளது. பெரும்பாலானோர் மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்கர் தர்ஸ்டன் , அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் ஆகியோர் பழங்குடியின சமுதாய மக்கள், மொழி, பழக்க வழக்கங்கள், உணவு முறை, தொழில், வசிப்பிடம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.
இத்தகைய கலாசார மக்கள் இன்றைய கால கட்டத்தில் தங்கள் பண பொருளாதாரம் உள்பட வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு தாங்கள் கோரும் சாதி சான்று வழங்கப்படாத நிலை தொடர்வதால், இவர்களின் குழந்தைகள் 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத காலம், காலமாக தொடர் கதையாக உள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் திடீர் முற்றுகை
இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்று வழங்காததால் தங்கள் பிள்ளைகளை 10 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. உடனடியாக காட்டுநாயக்கர் என ஜாதி சான்று வழங்க கோரி, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
உடனடியாக பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன், பஜார் காவல் ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் பிரதிநிதிகளுடன் சமரசம் பேசினர். உரிய விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியையடுத்து கலைந்து சென்றனர். காட்டு நாயக்கர் சமுதாய இன மாணவ, மாணவியர் பள்ளி சீருடைகளுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.










You must be logged in to post a comment.