18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை சாலையில் வைத்து மறியல் .. ராமேஸ்வரம் – மதுரை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..

கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை சாலையில் வைத்து மறியல் .. ராமேஸ்வரம் – மதுரை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 5:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்த முத்தாண்டி மகன் ராமச்சந்திரன், 52. மீனவரான இவர் நேற்று காலை 11 மணியளவில் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ராமச்சந்திரனுக்கும், கீழ நாகாச்சி வெள்ளமாசி வலசை முருகேசன் மகன்கள் கார்த்தி முனீஸ்வரன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி, முனீஸ்வரனை கைது செய்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு பின், ராமச்சந்திரன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும், உயிரிழந்த ராமசசந்திரன் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உச்சிப்புளி அருகே நாகாச்சி சாலையில் ராமச்சந்திரன் உடலை வைத்து இன்று காலை 11 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

உச்சிப்புளி போலீசார் சமரசம் பேசியும் மறியல் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் நீண்ட நேரம் அணி வகுத்து நின்றன. இதனையடுத்து மாற்று பாதையில் வாகனங்கள் போக்குவரத்திற்கு திருப்பி விடப்பட்டன. இதனையடுத்து ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன், ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் போலீசார் நீண்ட நேரம் சமரசம் பேசியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போக்குவரத்து பாதிப்பை கருத்தில் கொண்டு ராமச்சந்திரன் உடல், ஆம்புலன்ஸ் மூலம் உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டது.  கோட்டாட்சியர் சுமன், காவல் கூடு தல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தாசில்தார் முத்துலட்சுமி ஆகியோர் பல முறை சமரசம் பேசியும் சுமூகத் தீர்வு காணப்படாததால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட நேர சமரசத்திற்கு பிறகு, ராமச்சந்திரன் குடும்பத்தார் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றி உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. 5 மணி நேரத்திற்கு பின்னர், மதுரை – ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து சீரானது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!