கடந்த சில நாட்களாக, 40 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலி சென்னைக்கு அருகில் மூட்டுகாடு என்கிற இடத்தில் உள்ள NIEPMD நிறுவனத்தால் வழங்கப்படுவதாக ஒரு செய்தி வாட்ஸ்அப்பிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இது உண்மைக்கு புறம்பான செய்தி “நிப்மெட்” என்கிற நிறுவனம் சென்னைக்கு அருகில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் இருக்கக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக, அறிவியல் பூர்வமான யுக்திகள் மூலம் சேவை செய்து வருகிற ஒரு தேசிய நிறுவனம்.
இது மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அதாவது சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் மூலம் இயங்கி வரும் தேசிய நிறுவனமாகும்.
இதில் உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்ற திட்டம் இருக்கிறதே, தவிர 40 ஆயிரம் ரூபாய் இணையான தானியங்கி வசதி உள்ள சக்கர நாற்காலிகள் (Automatic wheel or motorized wheel chair) வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசிடமோ அல்லது அந்த அமைச்சகத்திடமோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகின்ற எந்த ஒரு தேசிய நிறுவனங்களிடமும் இல்லை என்பதுதான் உண்மையான நிலை.
இச்செய்தியை, பல பொதுமக்கள் நல்லெண்ணத்துடன் “இது ஏதாவது ஒரு மாற்றுத்திறனாளிக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று எண்ணம் கொண்டு, அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனால் பல மாற்றுதிறனாளிகள் இச்செய்தி உண்மை என்று நம்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பி ஏமாறும் சூழல் உருவாகி வருகிறது என்பது வேதனையளிக்கிறது.
ஆகவே இந்த பொய்ச் செய்தியை யாரும் நம்பி பகிர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்பட காரணமாக இருக்க வேண்டாம்.
செய்தியாளர், அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.