18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » இலங்கையில் இறைச்சி கழிவு தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி..!

இலங்கையில் இறைச்சி கழிவு தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி..!

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2019, 12:02 pm

இலங்கையில், இறைச்சிக் கழிவுகள் சேரும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளர் நான்கு பேர், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இலங்கையின் வடமாகாணமான வவுனியாவின் தாண்டிக்குளம் பகுதியில், நகரசபை நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கூடம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் ரத்தம் மற்றும் கழிவுகளை, ஆழமாக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று (25ம் தேதி) மதியம் 1 மணியளவில், நகரசபை துப்புரவு தொழிலாளர்களான சகாயமாதாபுரத்தைச் சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், ஜி.சசிக்குமார் மற்றும் பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தனசாமி ஆகியோர் அந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நான்கு பேரில் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவர்களும் அடுத்தடுத்து மயக்கமடைந்து தொட்டிக்குள் விழுந்துள்ளனர்.

இதைப்பார்த்த அங்கு பணியில் இருந்த காவலாளியும் வாகன ஓட்டுனர்களும், தொட்டிக்குள் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியாமல் போகவே, இதுகுறித்து நகரசபையின் அதிகாரிகளுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புபடைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், விஷவாயு தாக்கியதே இறப்புக்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இலங்கை மக்கள் மீள்வதற்குள், வவுனியாவில் நான்கு பேர் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!