18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த டென்மார்க் தொழிலதிபர்..!

குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த டென்மார்க் தொழிலதிபர்..!

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 6:24 pm

ஈஸ்டர் விடுமுறையை இலங்கையில் கழிக்க கொழும்பு வந்த டென்மார்க் தொழிலதிபர், குண்டு வெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு; டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (46). இவருக்கு நான்கு குழந்தைகள். இவர், ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார். ஆன்ட்ரசனுக்கு, 2 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களைக் கொண்ட இவருடைய சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ஆகும்.

இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர, 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. பெண்கள் உடையான ‘வேரோ மோடா’, ‘ஜேக் அண்டு ஜான்ஸ் ஜீன்ஸ்’ போன்றவை ஆன்டர்சனுக்கு சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமானவை.

ஆன்ட்ரசன், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தபோது, இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இவருடைய நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை, ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்ஸ் ஃபே‌ஷன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். ‘குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி, வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது; அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.

‘இலங்கை ஓர் அழகான நாடு; இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்’ என்று, தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில், குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!