துரைமுருகன் வீட்டிலிருந்து 2 கட்டைப் பைகளில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோல ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதில் துரைமுருகன் இல்லத்தில் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சோதனை காலை 11 மணியளவில் நிறைவடைந்தது.
இதன்பிறகு அதிகாரிகள் இரு கட்டைப்பைகளில் ஆவணங்களை கட்டுக்கட்டாக எடுத்துச் சென்றனர். இவை அனைத்தும் பல்வேறு பரி வர்த்தனைகள் தொடர்பான நகல்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், துரைமுருகன் வீட்டில் மொத்தம் ரூ.19 லட்சம் பணம் இருந்துள்ளது. துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கையிருப்பாக ரூ.9 லட்சம் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், வீட்டில்கூடுதலாக இருந்த ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதனால் துரைமுருகன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் நடைபெற்று வரும் வருமான வரி துறை சோதனை எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.