17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் முறை விளக்க முகாம்…

கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் முறை விளக்க முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2019, 1:34 pm

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற  தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்வுதளம் வசதிகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது. 

இதுவரை தூத்துக்குடி  மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்கள். அவர்கள் எந்தவிதமான மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்பதையும், எந்த வாக்குசாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதையும் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை பற்றிய விளக்க முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் மாற்றித்திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை பற்றிய விளக்க முகாம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது. வட்டாட்சியர் பரமசிவன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் தேர்தல் தூதர் அழகுலட்சுமி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் முறை பற்றி விளக்கப்பட்டது.

 வரும் பாராளுமன்ற தேர்தலில்  மாற்றுத்திறனாளிகள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி,சமூக நலத்திட்ட வட்டாட்சியர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அதிகாரி அபிராமசுந்தரி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!