ஜெயலலிதா எடுத்த முடிவுகளை தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். அதிமுக – பாஜக கூட்டணியை டி.டிவி.தினகரன் விமர்சனம் செய்கிறார் என்றால், அது ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார் என்று தான் அர்த்தம்.
கோவில்பட்டி அருகே வில்லிச்சேரி கிராமத்தில் நெடுஞ்சாலை முதல் கிருஷ்ணா நகர் வரை ரூ.36.30 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் வில்லிச்சேரி ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.24 லட்சம், நடுக்காலனி தெருவில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கடம்பூரில் நடந்த விழாவில் கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் பெட்டகம் வழங்கினார். மேலும், ரூ.17.90 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் வள்ளிநாயகபுரத்தில் ரூ.7.70 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். கழுகுமலை பேரூராட்சி குமாரபுரம், பாபா நகரில் தலா ரூ.3 லட்சத்தில் புதிய தொட்டியுடன் கூடிய மோட்டார் அறை அமைக்கவும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் தியாகி வெங்கடாச்சலம் நகரில் ரேஷன் கடை கட்டவும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் எஸ்.அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, நகரங்களில் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் குடிநீர், சாலைவசதி,கழிவுநீர் வடிகால் வசதி, மயான சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப, வில்லிசேரி கிராமத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் சாலை வசதி, குறிப்பாக இணைப்புசாலை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், தமிழக அரசு மக்களுக்கு இரண்டு மகத்தான திட்டங்களை துவக்கியுள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தாய் சேய்நலப் பெட்டி வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைத்துள்ளார். கருவுற்ற தாயின் உடல் நலத்திற்கும், அவர் வயிற்றில் வளரும் குழந்தையின் நலனை உறுதி செய்யவும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தவுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கருத்துகளை கூற கூடாது. 1998-ம் ஆண்டு முதன் முதலாக மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார். மதவாத சக்தி என்று அனைவரும் விமர்ச்சித்த நேரத்தில் ஜெயலலிதா துணிச்சலுடன் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெற்றார். நாங்கள் புதிதாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஜெயலலிதா எடுத்த முடிவுகளை தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். அதிமுக – பாஜக கூட்டணியை டி.டிவி.தினகரன் விமர்சனம் செய்கிறார் என்றால், அது ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார் என்று தான் அர்த்தம். அதிமுகவுடன் தேமுதிக நிச்சயமாக வரும். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். நேற்றைய தினம் ஏற்கனவே கூட்டணி இறுதி செய்யப்பட்ட கட்சிகளுடன் மிகப்பிரமண்டமான கூட்டம் நடைபெற்றது. அடுத்த நிகழ்வுகளில் நீங்கள் எதிர்பார்க்கிற கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்வார்கள், என்றார் அவர்.




You must be logged in to post a comment.