கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ள யாத்திரிகர்களை பாதுகாப்பாக அனுப்பி திரும்ப அழைத்து வருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் 15.03.2019, 16.03.2019 தேதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும், கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரின் தலைமையின் கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து தடையின்மைச் சான்று (Noc) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பாலித்தின் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் படகுகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கச்சத்தீவு யாத்திரைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விபரங்களை மீன் வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அவசர சூழ்நிலைக்கு ஏற்றவாறு யாத்திரிகர்கள் புறப்படும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்திரிகர்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். யாத்திரைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறை இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, சுங்கத்துறை மற்றும் உளவுத்துறை பணியகம் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பி.முல்லைக்கொடி, மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் உள்பட அரசு அலுவலர்கள், கச்சத்தீவு யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.