பொய் சாட்சியம் அளிக்க மிரட்டுவதாக சிறப்பு காவல் படையினர் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுக்கை. கோவில்பட்டியில் காவல்துறையை கண்டித்து இலுப்பையூரணி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கூசாலிபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை சொல்லி அவர்கள் தான் கொலை செய்தனர் என சாட்சியம் அளிக்குமாறு எங்களை ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மற்றும் மாரியப்பன், அவரது மனைவி நேச செல்வி, விஜயா, மனுவேல் மற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவரும் நாங்களும் வேறு, வேறு சாதியை சேர்ந்தவர்கள். எங்களுக்கு தெரியாத விஷயங்களை பற்றி சாட்சியம் கூற நாங்கள் மறுத்துவிட்டோம். ஆனாலும், காவல் சிறப்பு படையினரும் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தாரும் எங்களை பொய் சாட்சியம் அளிக்குமாறும், இல்லாவிட்டால் எங்கள் ஊரை சேர்ந்த மேற்குறிப்பிட்டவர்களை கொலை வழக்கில் சேர்த்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டியும், வற்புறுத்தியும் வருகின்றனர்.
எனவே, பொய் சாட்சியம் அளிக்க மிரட்டி வரும் சிறப்பு காவல் படையினர் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.