18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம் பூசி அருள் பாலிப்பு…

உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம் பூசி அருள் பாலிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2018, 1:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி பச்சை கல் மரகத நடராஜர் சிலையில் கடந்தாண்டு மார்கழி திருவாதிரை நாளில் பூசிய சந்தனம் நேற்று களையப்பட்டது. உத்திரகோசமங்கை மங்களநாதர்சாமி கோயில் நடராஜர் சன்னதியில் ஆடும் கோலத்தில் ஐந்தரை அடி உயர பச்சை மரகத கல்லிலான நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சந்தன காப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தன காப்பு களையப்படும்.நடப்பாண்டு விழாவையொட்டி  நேற்று அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியுடன் மரகத நடராஜருக்கு தீப ஆராதனை நடந்தது. காலையில் நடராஜரின் மேனி மீது பூசிய சந்தன காப்பு களையப்பட்டு, சிலை மீது சந்தனாதி, கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பச்சை மரகத மேனி அலங்காரத்தில் அருள்பாலித்த மரகநடராஜரை பக்தர்கள் நீண்வரிசையில் நின்று தரிசித்தனர்.

நேற்று (டிச.22) காலை சந்தனம் களைந்த மரகத நடராஜர் பக்தர்களுக்கு 18 மணி நேரம் அருள் பாலித்தார்.இந்நிலையில் இன்று (டிச.23) காலை 5:30 மணியளவில் சந்தனம் மீண்டும் பூசப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் அருள்பாலித்தார். 2020 மார்கழி திருவாதிரை நாளில் சந்தனம் கலையப்படும் மரகத நடராஜரை கண்டு தரிசனம் செய்யலாம். கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் குடிநீர் விநியோகம் செய்தனர். சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.கோவில் வளாகத்திற்குள் 28 கண்காணிப்பு கேமரா பொருத்தி பக்தர்களை போலீசார் கண்காணித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில், திவான் பழனிவேல்பாண்டியன், தலைமையில் அலுவலக மேலாளர் சுவாமிநாதன், சரக அலுவலர் ராமு, கண்காணிப்பாளர் கிரி, பேஷ்கர் கண்ணன் உட்பட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!