17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரிகளில் கேலிவதை (EVE TEASING) தடுப்பு தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்..

கல்லூரிகளில் கேலிவதை (EVE TEASING) தடுப்பு தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 13, 2018, 9:33 am

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 12.07.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே கேலிவதை தடுப்பு தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்ததாவது,​பள்ளிக் கல்வியை முடித்து பல கனவுகளுடன் கல்லூரியில் சேரும் மாணவ மாணவியர்களை கேலிவதை போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பது நமது கடமையாகும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக கேலிவதையை தடுப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி கல்வி நிலையங்களில் கேலிவதை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு கல்லூரியிலும் கேலிவதை தடுப்புக் குழு அமைத்து சீரான கால இடைவெளியில் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்திட வேண்டும்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய மாணவர்களின் சேர்க்கையின் போது கேலிவதை தொடர்பான விழிப்புணர்வினை மாணவ,மாணவியர்களிடையே ஏற்படுத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தி மனோதத்துவ அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.  கேலிவதை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நிறுவுவதோடு, வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.  கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவää மாணவியர்களுக்கு விடுதி காப்பாளர்கள் அறிமுகம் செய்வதோடு எளிதில் தொடர்பு கொள்ள தேவையான விபரங்களை வழங்கிட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் குறிப்பிட்ட தினத்தில் கேலிவதை தொடர்பான குறைகேட்பு நாள் நடத்திட வேண்டும்.

​கேலிவதை தொடர்பாக புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவியர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்.  கேலிவதை  தொடர்பான அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது கேலிவதை தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி மாணவää மாணவியர்களிடையே இந்த கேலிவதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 100 சதவீதம் கேலிவதை இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்தார்.

​இக்கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் நடராஜன் உள்பட காவல்துறை மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!