திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 571 ரொக்கம் வருவாயாக கிடைத்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் உண்டியல்கள் நிரம்பிய நிலையில், அவை திறந்து காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பணியில் கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எண்ணிக்கை முடிவில் உண்டியல்களில் இருந்து மொத்தமாக ரூ.4,35,55,571 ரொக்கம் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 954 கிராம் தங்கம் மற்றும் 9,331 கிராம் வெள்ளிப் பொருட்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 838 வெளிநாட்டு நாணயங்களும் உண்டியல்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்பும் இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உண்டியல் காணிக்கை வருவாயும் கணிசமாக உயர்ந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




You must be logged in to post a comment.