தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வேலை என போலியான செய்தியை பரப்பி பண மோசடியில் ஈடுபட்ட நபரை தென்காசி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் தென்காசி வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் “தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் உடனடி தேவை, தகவலுக்கு செல்போன் எண்ணில் அணுகவும்” என்று போலியான செய்தியை பரப்பி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து வருவதாக தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் I.P.S. உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர் தலைமையில், காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நிரந்தர வேலை வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தாலுகா, ஐயர்பாடியை சேர்ந்த லாசர் என்பவரின் மகன் சார்லஸ் விஜயகுமார் (வயது 31) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இணையதளத்திலும், வாட்ஸ் ஆப் குழுவிலும் இதுபோன்ற பரவி வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும், இதுபோன்ற வேலை வாய்ப்பு மோசடி குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கும் படியும் தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.