பாஜக இன்று 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் அதிமுகவில், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், அதற்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், அக்கூட்டணியில் மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பாஜக அறிவிக்காதது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அதுகுறித்த பட்டியல் இன்று வெளியாகலாம் எனக் கூறப்பட்டது. அதன்படி, இன்று அக்கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். கோவை வடக்குத் தொகுதியில் எம்.எல்.ஏவான வானதி ஸ்ரீனிவாசனும், மதுரை தெற்கில் ராம் ஸ்ரீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் போட்டியிடுகின்றனர். அதேபோல், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி விளவங்கோட்டில் போட்டியிடுகிறார். அதேநேரம், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக அண்ணாமலை டெல்லி தலைமைக்கு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அப்போதே தொகுதி அதிருப்தி காரணமாக, அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.




You must be logged in to post a comment.