ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள வைரவன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் உருண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அந்த கட்டிடத்திற்குள் செல்லாமல் இருக்க கிராம மக்கள் எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சேதமடைந்த மற்றும் இடிபாடுகளுடன் இருக்கும் இந்த கட்டிடத்தை ஓட்டுச்சாவடியாக பயன்படுத்துவது விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த கட்டிடத்தை உடனடியாக அகற்றி, அதற்குப் பதிலாக புதிய மற்றும் பாதுகாப்பான பள்ளி கட்டடத்தை அரசு கட்டி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறைகளும் இந்த பிரச்சினையை உடனடியாக கவனித்து, சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.