சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில்,இறுதி சடங்குகள் முடித்த கையோடு 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயும் உயிரிழந்த நிலையில் தனக்கும் 10ம் வகுப்பு படிக்கும்தனது தங்கைக்கும் உயர்கல்வி படிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் வசித்தவர் ஜெயபாண்டி . தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் மின்சார மோட்டாரை ஆன் செய்வதற்கு சுவிட்சை ஆன் செய்ய சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை காடுபட்டி கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. ஜெயபாண்டிக்கு சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற மகனும்,காடுபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 12 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் இருவரும் இந்த ஆண்டு அரசு பொது தேர்வு எழுதி வரும் நிலையில் திடீரென தந்தை உயிரிழந்தது குழந்தைகள் மத்தியில் கடும் சோகத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயபாண்டியின் மனைவியும் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் ஜெயபாண்டியனும் உயிரிழந்த நிலையில் அவர்களது இரண்டு பிள்ளைகளும் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இந் நிலையில் தனது தந்தைக்கு இறுதி சடங்கை முடித்த கையோடு இன்று காலை சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்கு வந்திருந்தார், கனத்த இதயத்துடன் கடும் மன அழுத்தத்தில் இருந்து அவரை அவரது உறவினர்கள் தேற்றி தேர்வு எழுதுவதற்காக அழைத்து வந்தனர். மேலும் தேர்வு எழுதும் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் , மாணவனுக்கு மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் கொடுத்து அவரை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர், அரசு தேர்வு எழுதி வரும் மாணவனின் தந்தை உயிரிழந்த நிலையில் மாணவன் மற்றும் அவரது தங்கையின் உயர்கல்வி படிப்புக்கும் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும் தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும். அதற்காக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட அமைச்சர் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜெயபாண்டி மகன் மகளின் கல்விக்கு வழி காட்ட வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




You must be logged in to post a comment.