அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இன்று உயர்ந்த மரியாதையை பெற்றுள்ளது. இந்த நாட்டில் வாழும் குடிமக்களும், பல நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து வாழும் வெளிநாட்டு வாழ் மக்களும் இதுவரை எந்த ஒரு குழப்பமோ, பயமோ, பதட்டமோ இல்லாமல் நிம்மதியாக தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
அமீரகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகின்றன. அதனால் தான் உலகின் பல நாடுகளில் இருந்து வரும் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், இந்த நாட்டை தங்களின் இரண்டாவது தாய்நாடு என்று பெருமையுடன் கருதுகின்றனர்.
ஆனால் சமீப காலங்களில் சில இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருத்தகரமான ஒன்று. சில ஊடகங்கள் உண்மையை விட மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு, அமீரகத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்ற தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இதன் மூலம் அமீரகத்தில் வேலை செய்து வாழும் இந்திய உறவினர்களின் குடும்பங்களில் தேவையற்ற பயமும் பதட்டமும் ஏற்படுத்தப்படுகின்றது.
இது பல நேரங்களில் இந்திய ஊடகங்களின் “குள்ள நரி தனம்” எனவே சொல்லப்பட வேண்டிய நிலையை உருவாக்குகிறது. உண்மையை வெளிப்படுத்துவதை விட, பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதே சில ஊடகங்களின் முக்கிய நோக்கமாக மாறி விட்டது. பொதுநலன், உண்மைத் தகவல், சமூக பொறுப்பு ஆகியவற்றை கடந்து, சலசலப்பை உருவாக்கி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதே முக்கிய நோக்கமாக மாறியுள்ளது.
சமீபத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட தாக்குதலை அமீரக அரசு மிகவும் சமார்த்தியமாகவும் துரிதமாகவும் சமாளித்தது. அந்த சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட சாதாரண புகைமூட்டத்தை செயற்கைக்கோள் புகைப்படங்களில் காட்டி, அந்த பகுதி முழுவதும் அழிவிற்கு உள்ளாகி விட்டது போல ஒரு மாயையை சில ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. ஆனால் உண்மையில் அந்த நிலைமை அவ்வாறு இல்லை. அரசு துரிதமான நடவடிக்கைகள் மூலம் சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
உண்மையில் அமீரகம் எப்போதும் பாதுகாப்பையும், மனிதநேயத்தையும் முன்னிலைப்படுத்தும் நாடாக இருந்து வருகிறது. இந்த நாட்டின் நிர்வாக திறன், கட்டுப்பாடு மற்றும் மக்கள் நலனுக்கான அக்கறை உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது.
அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பெருமையுடன் கூறுவது ஒன்று —
“அமீரகம் எங்களை வாழ வைக்கும் இரண்டாம் மண்” என்பதே அது. இந்த நாடு எங்களுக்கு வேலை வாய்ப்பையும், பாதுகாப்பையும், மரியாதையையும் வழங்கி வருகிறது. அதனால் தான் இங்கு வாழும் இந்தியர்கள் இந்த நாட்டை அன்புடனும் நன்றியுடனும் நினைத்து பெருமைப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
எனவே இந்திய ஊடகங்களில் வரும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தவறான செய்திகளை நம்பாமல், உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அமீரகம் அமைதியும் முன்னேற்றமும் நிறைந்த நாடாக இன்று உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாம் பெருமையுடன் சொல்லக்கூடிய ஒன்று —
WE STAND WITH UAE




You must be logged in to post a comment.