இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101.
ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து அரசு மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது, நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பிப்.1ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 நாள்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதி தீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர்.
இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லகண்ணு அவர்கள் பிப்.25 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தவர் இரா. நல்லகண்ணு.
பள்ளிப் பருவத்திலேயே பாரதியாரின் பாடல்கள் மீது ஈடுபாடு கொண்டவர். வ.உ.சிதம்பரனாா், சத்தியமூா்த்தி, பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் வரலாறுகளைப் படித்து நாட்டுப் பற்றினை வளா்த்துக் கொண்டாா்.
18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில், 27 வயதில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டபோது, நாடும் விடுதலை பெற்றிருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் செயலாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.
விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.




You must be logged in to post a comment.