22 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்; ஐயுஎம்எல் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி! பேட்டியின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

5 தொகுதிகளை கேட்டுள்ளோம்; ஐயுஎம்எல் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி! பேட்டியின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

எழுதியவர்: Askar February 22, 2026, 1:46 pm

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று (பிப். 22) தெரிவித்தார்.

திமுகவுடன் எப்போதுமே கூட்டணி தொடரும் என்றும், ஆலோசனைக்குப் பிறகு மீண்டும் அழைப்பு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் திமுக இன்றுமுதல் (பிப். 22) ஈடுபட்டு வருகிறது. முதல் வாய்ப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு ஐ.எம்.யு.எல். கட்சியின் காதர் மொகிதீன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைந்திருப்பது கொள்கை ரீதியானது. அரசியல் வாக்குகளுக்காக மட்டும் அல்ல. எந்தச் சூழலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெறும் அரசியல் கட்சி அல்ல. சமுதாயம் சார்ந்த அரசியல் அமைப்பு.

தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். 2026 தேர்தலில் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். 5 தொகுதிகள் இல்லாவிட்டால் 4 தொகுதிகளையாவது ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்.

கலைஞர் கருணாநிதி காலத்தில் முஸ்லிம் கட்சிகளுக்கு 16 தொகுதிகளைக் கேட்டோம். கடந்த முறை ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை தியாகம் செய்யுமாறு அவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும். தேர்தலில் போட்டியிட சின்னம் சார்ந்து எந்த பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் உள்ளது. எங்களைப் பொருத்தவரை சின்னம் பிரச்னையல்ல எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில்;

அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் திடீரென மயங்கி விழுந்தார்.

திமுகவுடன் ஆன கூட்டணி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

தற்போது நலமாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!