நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி, திடீர் போராட்டம். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த, தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி, செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்று, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், முதுநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் தங்களுக்கு லேப்டாப் வழங்க கோரி கல்லூரி முன்பு, நிலக்கோட்டை – வத்தலகுண்டு சாலையில், வகுப்புகளை புறக்கணித்து, தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தால், கல்லூரி முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அப்போது, வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் மற்றும் காவல் துறையினர் கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யனார், நிலக்கோட்டை பேரூர் இணைச்செயலாளர் பிரேம், தமிழக வெற்றிக்கழக ஒன்றி நிர்வாகி ஸ்ரீவாசன் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அப்போது,
தமிழக வெற்றி கழக. நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வத்தலகுண்டு காவல் நிலையம் அழைத்துச்சென்ற தவெக நிர்வாகிகளை விசாரணை செய்து, மாணவிகளின் போராட்டத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது என, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு லேப்டாப் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் லேப்டாப் வழங்கவில்லை என்றால், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் எனவும், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
பின்னர், மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மூன்று நாட்களுக்குள் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடித்து மாணவிகள் மதியத்திற்கு பிறகு தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.




You must be logged in to post a comment.