பீகார் எம்.பி., பப்பு யாதவ் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – SDPI கட்சி கண்டனம்! பீகாரைச் சேர்ந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், 31 ஆண்டுகளுக்கும் முந்தைய (1995) வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
2026 பிப்ரவரி 6 அன்று நள்ளிரவில் பாட்னாவிலுள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையும் கைது நடவடிக்கையும், அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்து கொண்டவர்களை அச்சுறுத்தவும் அவர்களின் குரலை ஒடுக்கவும் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையே உறுதிப்படுத்துகிறது எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயல் தலைவர் முகமது ஷஃபி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில்; இந்தக் கைது நடவடிக்கை சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு பாட்னாவின் கர்தானிபாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சொத்தை வாடகைக்கு எடுத்து, அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றியதாகக் கூறப்படும் ஒரு பழைய விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருப்பது கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பாட்னா சம்பு பெண்கள் விடுதியில் நீட் (NEET) மாணவி ஒருவரின் மர்ம மரணம் குறித்து, நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பப்பு யாதவ் நீதி கேட்டுத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே இந்தக் கைது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவம் பீகார் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளைப் பலமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.
அரசு அமைப்புகளின் தோல்விகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் பப்பு யாதவ், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், சீருடை அணியாத அதிகாரிகளின் தலையீடு மற்றும் அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்தக் கைது, துணிச்சலாகப் பேசும் விமர்சகர்களைப் பழிவாங்கும் நோக்கில் உறங்கிக் கிடக்கும் பழைய வழக்குகளை மீண்டும் கிளறும் ஒரு மோசமான போக்கைப் பிரதிபலிக்கிறது. இது வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் கோருபவர்களை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகக் கோட்பாடுகளைச் சீர்குலைப்பதோடு, சட்ட அமலாக்கத் துறையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அறவே சிதைக்கின்றன. எனவே, பப்பு யாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவரது கைது தொடர்பான சூழல்கள் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி கோருகிறது.
மேலும், ஒடுக்கப்பட்ட மற்றும் எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு எதிராக சட்ட அமைப்பை ஆயுதமாகப் பயன்படுத்தும் பழிவாங்கும் அரசியலை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.




You must be logged in to post a comment.