தென்காசி மாவட்டத்தில் மூன்று கோவில்களில் உள்ள நகைகளை திருடிய நான்கு குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் காவல்துறை விசாரணையில் மேலும் பல கோவில்களில் திருடியது அம்பலமாகி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணல்காட்டானூர், ராமச்சந்திரபுரம் மற்றும் தீர்த்தாரப்புரம் ஆகிய மூன்று ஊர் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கழுத்தில் இருந்த பொட்டுத் தாலிகளை திருடிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் உத்தரவின் பேரில், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர்களின் மேற்பார்வையில், கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி, உதவி ஆய்வாளர்கள் டேவிட்ஸ்டீபன், மாடசாமி மற்றும் தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், சரவணன், சிம்சன் ஆகியோர் 300 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கோவில் நகைகளை திருடிய இடைகால் பகுதியை சேர்ந்த சுடலை இசக்கி என்பவரின் மகன் முப்புடாதி (வயது 19), கண்ணன் என்பவரின் மகன் இசக்கி சூர்யா (வயது 24), செய்த அலி என்பவரின் மகன் சதாம் உசேன் (வயது 23) மற்றும் ஊர்மேல் அழகியான் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ஹரிஷ் (வயது 24) ஆகிய நான்கு நபர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று கோயில்களிலும், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாறையடி மற்றும் மங்கம்மாசாலை என இரண்டு இடத்திலும், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலபத்திர ராமபுரத்தில் இரண்டு கோவில்களிலும், ஆழ்வகுறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துப்பாக்குடியில் ஒரு கோயிலிலும், வி.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழநீர்குளத்தில் ஒரு கோயிலிலும் மற்றும் வாசுதேவ நல்லூரில் ஒரு கோயில் என பல்வேறு கோவில்களில் திருடி உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 4 1/2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.