17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

எழுதியவர்: Askar January 24, 2026, 2:19 pm

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பேரவையில் அவர் பேசியதாவது:

“கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகியுள்ள நிலையில் ரூ. 3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புற ஊரக சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்தால் குடும்பத்திற்கு ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 50,000 -லிருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவர்களில் இறப்பு ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,100 வழங்கப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குசிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!