வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கான காலக்கெடு புதுச்சேரி போல் தமிழ்நாட்டிற்கும் நீட்டிக்கப்பட வேண்டும்!-மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை;
இந்தியத் தேர்தல் ஆணையம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக, அங்கு நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் தாக்கல் செய்யும் கடைசி நாளை 19.01.2026 வரை நீட்டித்துள்ளது என்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.
அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை விடுமுறைகள், மக்கள் இடம்பெயர்வு, அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்கள் செயல்படாத நிலை காரணமாக, படிவம்6,7,8 போன்ற படிவங்களைத் தாக்கல் செய்யப் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட இந்த நியாயமான காலக்கெடு நீட்டிப்பு, சமத்துவம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், இதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். வாக்குரிமை என்பது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமை. அதை நடைமுறையில் பயன்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.
எனவே, புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை மேலும் குறைந்தது ஐந்து நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.




You must be logged in to post a comment.