தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாகவும், நடுத்தர மக்களின் முதலீட்டுத் புகலிடமாகவும் திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை, தற்போது சாமான்ய மக்கள் எட்ட முடியாத உயரத்தில் பயணித்து வருவது நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்த முதல் நாளில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், அதன் பிறகு தொடர்ச்சியான உயர்வையே சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியைத் தந்தது. நேற்று (ஜனவரி 16) சற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று (ஜனவரி 17, 2026) மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,090-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையை ஒட்டியே வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று சரிவைக் கண்டிருந்த வெள்ளி, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 அதிகரித்து ரூ.310-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 அதிகரித்து, இன்று ரூ.3,10,000-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதன்முதலாகத் தங்கம் சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. இடையில் சற்று விலை குறைந்தாலும், ஜனவரி மாதத் தொடக்கத்தில் இருந்து மீண்டும் புதிய உச்சங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்தத் தொடர் மாற்றங்கள் நிகழ்வதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.




You must be logged in to post a comment.