நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார்மயமாகக் கூடாதி என்றும் அனைவருக்கும் சமமாக அது கிடைக்க வேண்டும் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஜன. 13) தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் மொழி, கலாசாரம், மதத்திற்கு மரியாதை அளிக்கும் இந்தியாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் கூடலூரில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்வில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நீலகிரியில் உள்ள பழங்குடி மக்களுடன் நடனமாடினார். தொடர்ந்து, பள்ளி நிகழ்ச்சியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மாணவர்களுடன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது;
ஐடி துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. தரவுகள் எளிமையாகக் கிடைக்கும் காலகட்டத்தின் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பப் புரட்சி குறித்து கேள்விப்பட்டிருப்போம். செய்யறிவு (ஏஐ) மற்றும் தரவுகள் என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். தரவுகளை சுலபமாக அணுகக்கூடிய மற்றும் பெறக்கூடிய இடத்தில் இருக்கிறோம்.
அத்தகைய தரவுகளைப் பெற்று அறிவாக மாற்றிக்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்கும் பணிகளில் பள்ளிகள் ஈடுபட வேண்டும். ஞானத்துடன் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.
தரவுகளால் கையாளப்படும் சூழலிலும் ஞானமுடன் நடந்துகொள்ளும் குடிமக்களை பள்ளிகள் உருவாக்க வேண்டும். ஞானம் இல்லாமல் தரவுகளால் மட்டுமே நாம் கையாளப்படும்போது விரும்பத்தகாத இடமாக இந்த பூமி மாறிவிடும்.
கல்வி ஒருபோதும் தனியார் மயமாகிவிடக் கூடாது, மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.
மாணவர்கள் சிறந்த குடிமக்களாக மாறும் இடத்தில் கல்வி நிலையங்கள் உள்ளன. இதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு எனக் குறிப்பிட்டார்.




You must be logged in to post a comment.