17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்செந்தூர் கோவில் பணி; கனிமொழி எம்.பி ஆய்வு..

திருச்செந்தூர் கோவில் பணி; கனிமொழி எம்.பி ஆய்வு..

எழுதியவர்: Abubakker Sithik June 28, 2025, 3:28 pm

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதி கட்டப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை பாராளுமன்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. திருக் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருக் குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திருப் பணிகளை விரைந்து முடித்திட கனிமொழி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

 

மேலும், திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், அகன்ற எல்.இ.டி திரைகள் உள்ளிட்ட வசதிகள் மேற் கொள்ளப்பட உள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்கள். மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பணிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்து மேற் கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

 

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் அன்னதானம் வழங்குவது தொடர்பாக மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவானந்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தர்க்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!