18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்!-வைகோ பொங்கல் வாழ்த்து!!

தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்!-வைகோ பொங்கல் வாழ்த்து!!

எழுதியவர்: Askar January 13, 2025, 1:20 pm

தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்!-வைகோ பொங்கல் வாழ்த்து!!

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இஞ்சி, மஞ்சள், கரும்புடன், புதுப்பானையில் புத்தரிசி இட்டுச் சர்க்கரைப் பொங்கல் படைத்துப் பெற்றோரோடும் இல்லத்து அரசியோடும், மக்கள் செல்வங்களோடும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்தோடு குலவையிட்டு மகிழ்கின்ற நாள்தான் தைத்திருநாள் ஆகும்.

‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவப் பெருந்தகையால் வருணிக்கப்பட்ட உழவர்களின் வாழ்வில் எண்ணற்ற இன்னல்கள் சூழ்ந்து விட்டன. நீர்நிலைகள், ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. நீர் வரத்து பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் துயரத்தில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டும். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள், மகளிர், மாணவர் அனைவர் நலனையும் காக்கின்ற தொலைநோக்குப் பார்வையோடு முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் இந்தியாவின் பிற மாநிலங்கள் எலலாம் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியில் பொன் முத்திரையை பதித்து வருகிறார். இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம்.

உலகம் முழுமையும் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8 13.01.2025

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!