17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெரியாரை விமர்சிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி!- திருமாவளவன் விமர்சனம்!!

பெரியாரை விமர்சிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி!- திருமாவளவன் விமர்சனம்!!

எழுதியவர்: Askar January 10, 2025, 4:08 pm

கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துகள் மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்களைச் சந்தித்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் சீமான் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகின்றனர். சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி மிகுந்த தந்திரமேயாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது, “சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது. குதர்க்கவாதமாகவும் இருக்கிறது. அவர் பேசும் அரசியலுக்கு எதிராக போய் முடியும். பாஜக உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் பேசும் மதவழி தேசியம்தான் மொழி வழி தேசியத்தின் முதன்மை எதிரியாக இருக்க முடியும்; தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும். அதைவிடுத்து தமிழுக்காகவும், தமிழருக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய சமூகநீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. அதை அவர் கைவிட வேண்டும்.

அண்ணாமலையே ஆதரிக்கிறார் என்றால் தான் பேசும் அரசியல் எத்தகையது என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணாமலை ஆதரிப்பார், அண்ணாமலையைச் சார்ந்த சங் பரிவார்கள் ஆதரிப்பார்கள். அந்த அரசியலைத்தான் இவர் பேசுகிறார் என்றால் இவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பெரியார் தமிழ் மீதும் தமிழ் மக்களின் மீதும் வைத்திருந்த அக்கறையால் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வேண்டும், இன்னும் தொன்மைக் காலத்து சொற்களே இருக்கின்றன என தமிழின் தொன்மையைக் குறிப்பதற்காக பெரியார் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். காலத்திற்கு ஏற்ப நவீன வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெரியார் பேசியதை திரித்து பேசுகிறார்கள்; பெரியாரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இது ஏற்புடையது அல்ல” எனத் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!