17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

தென்காசியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

எழுதியவர்: Abubakker Sithik August 13, 2024, 1:05 pm

தென்காசியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (12.08.2024) அன்று சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் து.பெ.சுரேஷ்குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் இ.சி.ஈ.ஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்ததாவது, தென்காசியில் நடைபெற்ற பேரணியில், இ.சி.ஈ.ஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டு மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மதுநாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும், தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய் உயர் ரத்த அழுத்தம் புற்று நோய் ஏற்படும். மலட்டுத் தன்மையை உருவாக்கும், கண்பார்வை மங்குதல், கை, கால் வலிப்பு உருவாக்கும். மூளையையும் நரம்பு மண்டலத்தை தாக்கி சோர்வடையச் செய்யும், கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மாரடைப்பு மூலம் திடீர் மரணம் ஏற்படும். மனிதனை நோயாளியாக்கி அவனை தற்கொலைக்கு தூண்டும். உறவினர், சுற்றத்தாரின் வெறுப்புகளுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி பிள்ளைகளின் முன்னேற்றத்தை பாதிக்கும். வருமானம் ஈட்டும் திறன் குறையும். எதிர்காலத்தை பாதிக்கும். மது குடிப்பதை நிறுத்தி விடுவோம். குடும்ப மகளிருக்கு தோள் கொடுப்போம். பல தீமைகளிலிருந்து விடுபட மது மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம். வீட்டிற்கும் நாட்டிற்கும் வளம் சேர்ப்போம்.

மது மற்றும் போதைப் பொருள்கள் தொடர்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். 10581 என்ற எண் மாநில அளவில் பயன்பாட்டில் உள்ளது. தென்காசி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்அப் எண் 9487548177, 9411494115 மதுவிலக்கு தொடர்பான புகார்களை இந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்பது உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து கோஷமிட்டு தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சக்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை பேரணியாகச் சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.

இதன் மூலம், பொதுமக்கள் அனைவரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிந்து கொண்டு நலத்திட்டத்தினை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) பா.ராமச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) இரா.வேணுகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி.உதயகிருஷ்ணன், காவல்துறையினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!