17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய கிரிமினல் சட்டங்கள் வீண் வேலை.. அரசியலமைப்புக்கு எதிரானது!-பா.சிதம்பரம் குற்றச்சாட்டு..

புதிய கிரிமினல் சட்டங்கள் வீண் வேலை.. அரசியலமைப்புக்கு எதிரானது!-பா.சிதம்பரம் குற்றச்சாட்டு..

எழுதியவர்: Askar July 1, 2024, 9:27 am

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார். புதிய சட்டங்கள் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ‘இன்று நடைமுறைக்கு வந்துள்ள 3 புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களை வெட்டி ஒட்டிய வேலை தான் நடந்துள்ளது. புதிய சட்டங்களில் உள்ள சில அம்சங்களை நங்கள் வரவேற்றோம். இதற்கு பழைய சட்டங்களில் சில திருத்தம் கொண்டு வந்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கியது வீண் வேலை. அதுமட்டுமின்றி புதிய சட்ட விதிகளில் சில முன்னுக்குப் பின்னான குழப்பங்கள் உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த அம்சங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள எம்.பிக்கள் கருத்து வேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டிருந்தும் அந்த விமர்சனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் பாராளுமன்றதில் நடைபெறவில்லை. சட்ட வல்லுனர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் புதிய சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை. இதற்கு நேர் மாறாக எந்த விவாதமும் இன்றி புதிய சட்டங்களை அரசு தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல். இந்த புதிய சட்டங்கள் சிறிது காலத்துக்கு நீதிமன்றங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். மேலும் வருங்காலத்தில் இந்த புதிய சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிராக உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டு நீதித்துறையின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!