அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.விஜய பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக சார்பில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!-எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
எழுதியவர்: Askar March 21, 2024, 8:02 pm




You must be logged in to post a comment.