17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி; காவல் துறை எச்சரிக்கை..

நெல்லையில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி; காவல் துறை எச்சரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik March 14, 2024, 8:43 am

குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டரால் நெல்லையில் பரவிய வதந்தி; காவல்துறை எச்சரிக்கை..

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் பகுதியிலுள்ள சுவர்களில் “ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!” என்ற பெயரில் நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதாகவும், பெற்றோர்கள் கவனமாக இருக்கும் படி தெரிவிக்கப்படுவதாகவும் காவல்துறை மற்றும் ஊர்பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக காவல்துறை விசாரித்ததில், பற்பநாதபுரத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மகன் இமானுவேல் அந்தோணி (29) என்பவர், பாளையங்கோட்டை, அண்ணா நகரை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ்(30) ஆகியோர் சேர்ந்து எவ்வித உண்மையும் இல்லாமல் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி ஏற்படுத்தும் விதத்திலும் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுவரொட்டி ஒட்டியதாக தெரியவந்தது. இது சம்பந்தமாக சிவந்திப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து மேற்படி இரு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

மேலும் இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பில், இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடி நடவடிக்கைக்காக 100 என்ற எண்ணையோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுபோன்று பொது வெளியிலோ அல்லது சமூக வலை தளங்களிலோ வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!