17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் புதிதாக உதயமாகிறது ரயில் பயனாளர்கள் சங்கம்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உதயமாகிறது ரயில் பயனாளர்கள் சங்கம்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

எழுதியவர்: Abubakker Sithik January 19, 2024, 12:21 am

தென்காசி மாவட்டத்தில் புதிதாக ரயில் பயனாளர்கள் சங்கம் உதயமாகிறது. இச்சங்கம் ரயில் பயனாளர்கள் நலனை மையமாக கொண்டு செயல்பட உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் பாண்டிய ராஜா தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை பேணும் வகையிலும், தென்காசி மாவட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய சங்கத்தினை தோற்றுவிப்பது, இதற்கென ஒரு நிர்வாக குழுவை அமைத்து சங்க பதிவு சட்டப்படி புதியதோர் சங்கத்தை தோற்றுவிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாவட்ட ரயில் பயணிகளின் நலனை பேணிகாப்பதற்கும், கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் தோற்றுவிக்கப்படும் புதிய சங்கத்திற்கு தென்காசி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கம் என ஏகமனதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பெயர் சூட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. மேற்படி சங்கத்தை தென்காசி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்வதென ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை முழுவதுமாக பேணிக் காக்க தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்திற்கு தலைவராக பாண்டியராஜா, செயலாளராக ஜெகன், பொருளாளராக தொழிலதிபர் சேவியர் ராஜன், துணை தலைவராக சுரேஷ், துணை செயலாளராக தினேஷ் ஆகியோர் ஏகமனதாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன்களை முழுவதுமாக பேணிக்காக்க தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கம் செயல்படுவதற்கு ஏற்ற கட்டிடத்தினை தேர்வு செய்து சங்க அலுவலகத்திற்காக வாடகை ஒப்பந்தத்தினை கட்டிட உரிமையாளருடன் ஏற்படுத்துவதற்கும் சங்க பதிவு சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கும் சங்க செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செயலாளர் ஜெகன் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தென்காசி மாவட்டத்திற்கான அனைத்து ரயில் தேவைகளை பூர்த்தி செய்யவும் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயிலினை விரைவில் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், பாவூர்சத்திரம், பிச்சையா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கத்தின் தலைவர் பாண்டியராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!