18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை தாலுகா அலுவலக அடிக்கல் நாட்டு விழா – புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்புடன்..

கீழக்கரை தாலுகா அலுவலக அடிக்கல் நாட்டு விழா – புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்புடன்..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2018, 2:37 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைய வேண்டும் என்கிற கீழை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திராவிட கட்சிகள் இதற்கான முன்னெடுப்புகளை செய்தது.

மேலும் கீழக்கரையில் தாலுகா அமைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக சமுதாய பொதுநல அமைப்பினர் தங்கள் அளவில் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் அமைய கீழக்கரையில் போதிய இடவசதி இல்லாததால்  கீழக்கரை மக்கள் நலன் கருதி தொழில் அதிபர் செய்யது சலாவுதீன் தனது சொந்த இடத்தில் மூன்று ஏக்கரை தமிழக கவர்னர் பெயரில் எழுதி கொடுத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரத்தில் நடந்த மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாலுகா அலுவலகம் அமைய கீழக்கரை தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்ட இரண்டு கோடியே அறுபத்தி மூன்று லட்சம் நிதி ஒதுக்கி அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக தகவல் தொடர்பு துறை அமைச்சருமான மணிகண்டன் கீழக்கரை தாலுகா அலுவலகம் அமைய அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், தாலுகா அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கீழக்கரை முன்னாள் நகர் மன்ற தலைவி ராவியத்துல் கதரிய்யா, சமூக சேவகி சாம் சபியா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முகைதீன் இப்ராகீம், கீழக்கரை நகர் அ தி மு க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி முன்னணியினர், கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் இக்பால், சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் தாலுகா அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மணிகண்டனை சந்தித்து ஏற்கனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியதோடு. கீழக்கரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் மக்கள் வரிப்பணத்தில் செய்ய வேண்டிய காரியத்துக்கு சொந்த செலவில் நிலங்களை வழங்கியது நிச்சயமாக பாராட்டுக்குரிய செயல்தான். ஆனால் அதே சமயம் கீழக்கரையில் அரிய பொக்கிஷமாக கருத வேண்டிய நூல்கள், அழியும் நிலையில் உள்ள நூலகத்தை மறுசீரமைக்கவும், வெளியுலக விளையாட்டு என்பதையே மறந்து, கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கி கிடக்கும் இளைய சமுதாயத்தை காக்கும் வகையில் மற்ற ஊர்களில் உள்ளது போல் பொது விளையாட்டு மைதானம் உருவாக்கவும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே பொதுமக்களின் எண்ணமும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

புகைப்படத் தொகுப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!