தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ரூ. 1,14,437 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் (டிச.04) திங்கள் கிழமை நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.13,500 வீதம் மூன்று சக்கர சைக்கிள்கள், ரூ.81,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியினையும், 1 பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காதொலி கருவியினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.16,437 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ. 1,14,437 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 430 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) ராஜேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.